கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் சமீபகாலமாக கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறி அதிக எண்ணிக்கையிலான மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, திருவள்ளூர், தாம்பரம், திரு.வி.க. நகர் உள்ளிட்ட பகுதியில் இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனம், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை நிலையான வருமானம் தருவதாக விளம்பரம் செய்துள்ளது. இதை நம்பி ஏராளமானோர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
அந்த வகையில், சுமார் ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி வரை பொதுமக்களிடம் வசூலித்துவிட்டு, வட்டியும் தராமல், அசல் தொகையையும் திருப்பித் தராமல் அந்நிறுவனம் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டே இந்த நிறுவனம் குறித்து இந்தியா ரிசர்வ் வங்கியிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், நிறுவனத்தின் இயக்குநர்கள் தலைமறைவாகினர்.
மேலும், கம்பெனிகள் பதிவுத் துறை அந்நிறுவனத்துக்கு அபராதமும் விதித்தது. இந் நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகாரின் பேரில், சென்னை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் அந்நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் ஜான் சார்லஸ் ரட்சகன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது தலைமறைவாக உள்ள நிறுவன இயக்குநர் மற்றும் நிர்வாகிகளைப் பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட நபர்கள், சென்னை அசோக் நகரில் உள்ள காவல் பயிற்சி கல்லூரி வளாகத்தில் இயங்கும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.