கடலூர்: கடலூரில் வீட்டில் சார்ஜ் போட்டு வைத்திருந்த இ-பைக் உடன் மேலும் 2 பைக்குகள், மின் மோட்டார் என பல பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அண்ணா நகரில் வசித்து வருபவர் இனியவன் சேது. இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் இரண்டு எலக்ட்ரிக் பைக்குகள் உள்ளன. மேலும், பெட்ரோல் மூலம் இயங்கக்கூடிய பைக் ஒன்று என 3 பைக்குகள் உள்ளது. இந்த நிலையில், இன்று (டிச.4) அவர் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இ-பைக் ஒன்றுக்கு சார்ஜ் போட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அதன்பின், சிறிது நேரத்திலேயே அந்த இ-பைக் எரிந்தது. இதில் அருகில் இருந்த இரண்டு பைக்குகளும் எரிந்து போனது. மேலும், இரண்டு மிதிவண்டிகள்,மின் மோட்டார் உள்ளிட்ட பல பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கடலூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். எரிந்த பைக்குகள் உள்ளிட்ட பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று வீட்டில் தீப்பற்றி எரிந்த இ-பைக்கின் சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் கடலூரில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.