பெரியநாயகம்
ஓசூர்: அஞ்செட்டி அருகே பாலியல் தொந்தரவால் பெண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், திமுக இளைஞரணி நிர்வாகி கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண், கணவரைப் பிரிந்து, தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இவர், தனது இரண்டரை வயது பெண் குழந்தைக்கு, கடந்த டிசம்பர் மாதம் 11-ம் தேதி வலிப்பு வந்ததாகக் கூறி, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
குழந்தை உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அப்பெண்ணின் கணவர் அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் குழந்தை சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடற்கூறு ஆய்வறிக்கையில், பாலியல் கொடுமையால் குழந்தை உயிரிழந்தது தொியவந்தது. இதையடுத்து, குழந்தையை பாலியல் கொடுமை செய்ததாக ஜேசுராஜபுரம் கோம்பைக்காடு பகுதியைச் சேர்ந்த பெரியநாயகம்(40) என்பவரைப் போலீஸார் கைது செய்தனர்.
அவர் திமுக இளைஞரணி கிளைச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார். அவருக்கும், இறந்த குழந்தையின் தாய்க்கும் தவறான பழக்கம் இருந்துள்ளது. அந்தப் பெண் வீட்டில் இல்லாத நேரத்தில் பெரியநாயகம் குழந்தையை பாலியல் கொடுமை செய்ததில், உடல்நலம் பாதிக்கப்பட்டு குழந்தை உயிரிழந்துள்ளது.
போக்சோ பிரிவில் பெரியநாயகம் மீது வழக்குப் பதிவுசெய்து, கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பச்சிளம் குழந்தையை பாலியல் கொடுமை செய்து, கொலை செய்துள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
திமுக ஆட்சி ஒழிந்தால் மட்டுமே, தமிழகத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார். இதேபோல, பல்வேறு கட்சித் தலைவர்களும் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.