க்ரைம்

ஆபத்தான முறையில் பைக் சாகசம்: சென்னையில் இளைஞர்கள் 3 பேர் கைது

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை வடபழனி 100 அடி சாலையில் கடந்த 7-ம் தேதி அதிகாலை பைக்குகளில் சென்ற இளைஞர்கள் சிலர், ஒருவரை ஒருவர் ஆபத்தான முறையில் முந்திச் சென்றபடி சாகசத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. தகவலறிந்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து விலை உயர்ந்த 2 பைக்குகளை பறிமுதல் செய்த போலீஸார், மேலும், சாகசத்தில் ஈடுபட்ட 3 பைக்குகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட 3 பேரும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை:

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலும், சாகசம் என்ற பெயரில் அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனங்களை இயக்குவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.

SCROLL FOR NEXT