க்ரைம்

விருதுநகர் அருகே கோஷ்டி மோதலில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு: கலவரத்தை தடுக்க 144 தடை உத்தரவு

இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் கல்லூரி மாணவர் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். அதையடுத்த, கலவரத்தை தடுக்கும் வகையில் சத்திரெட்டியபட்டி கிராமத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சத்திரரெட்டியபட்டியைச் சேர்ந்த குருவம்மாள் என்பவர் கணவரைப் பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக தனது மகன், மகளை வளர்த்து வந்தார். விருதுநகரில் உள்ள ஒரு எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் குருவம்மாள் பணியாற்றி வருகிறார். இவரது மகன் அனஞ்சன் (19), விருதுநகரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவரது நண்பர் ராம்குமார் (18).

ராம்குமாரும் அருகே உள்ள மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட கொக்கலாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். ராம்குமார் கடந்த வாரம் தனது மற்றொரு நண்பரான கொக்கலாஞ்சேரியைச் சேர்ந்த மகாராஜன் (25) என்பவருடன் மது அருந்தியுள்ளார். அப்போது, ராம்குமார் காதலியின் தாயாருக்கும் தனக்கும் பழக்கம் உள்ளதாகக் கூறிய மகாராஜன், அது தொடர்பான வீடியோக்களை ராம்குமார் காதலிக்கு வாட்ஸ்-ஆப்பில் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக ராம்குமாரிடம் அவரது காதலி நேற்று முன்தினம் கேள்வி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார் தனது நண்பர் அனஞ்சன் உள்ளிட்டோருடன் கொக்கலாஞ்சேரிக்கு சென்று மகாராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அனஞ்சன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும், மேல் சிகிச்சைக்காக இன்று காலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் அனஞ்சன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்டம் கள்ளிக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கொக்கலாஞ்சேரியைச் சேர்ந்த நபர்கள் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டியைச் சேர்ந்த ராம்குமார் மற்றும் அவரது நண்பர்களை தாக்கக் கூடும் என்பதாலும் இரு தரப்பினரிடையே மேலும் மோதல் ஏற்படும் சூழல் காரணமாகவும் சத்திரரெட்டியபட்டிக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா இன்று உத்தரவிட்டுள்ளார்.

அதையடுத்து, கூடுதல் எஸ்.பி. கருப்பையா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் சத்திரரெட்டியபட்டியில் குவிக்கப்பட்டுள்ளனர். ஊருக்குள் செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. சத்திரரெட்டியபட்டியில் அனைத்து தெருக்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

SCROLL FOR NEXT