கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகிகள். (அடுத்த படம்) கைதான மைக்கேல்
கோவை: தமிழ்க்கடவுள் முருகன் குறித்து அவதூறாக சமூகவலைதளங்களில் பதிவிட்ட கோவை இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள ராக்கிபாளையத்தைச் சேர்ந்தவர் மைக்கேல்(35). இவர், தனது சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக, தமிழ்க்கடவுள் முருகன் குறித்து அவதூறாக கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளார்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகள் சார்பில் நேற்று (ஆக.14) மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையே, மைக்கேலின் இருப்பிடம் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட ராக்கிபாளையம் என்பதை அறிந்த இந்து முன்னணி கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், அவரது இருப்பிடத்துக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் போலீஸாரிடம் இன்று (ஆக.15) புகார் மனு அளித்தனர்.
ஒன்றிய பொதுச் செயலாளர் எம்.சங்கர் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், ‘‘நான் மேற்கண்ட பகுதியில் குடியிருந்து, இந்து முன்னணி இயக்கத்தின் நரசிம்மநாயக்கன்பாளையம் ஒன்றிய பொதுச்செயலாளராக உள்ளேன்.
நான் எனது இன்ஸ்டாகிராம், முகநூல் சமூகவலைதளப் பக்கங்களை பார்த்துக் கொண்டிருந்த போது, மைக்கேல் என்பவர், உலகத் தமிழர்கள் போற்றும் தமிழ்க்கடவுள் முருகனை அவமதித்து, தகாத வார்த்தைகளால் திட்டி பதிவிட்டுள்ளார்.
இவரது பதிவு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி, மத மோதலை தூண்டுவது போல் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்து மதத்தையும் இந்து கடவுளையும் இழிவாக பேசிய இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க வேண்டும்’’என்றார்.
இப்புகார்களைத் தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், அவதூறு பேச்சு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து மைக்கேலை இன்று (ஆக.15) இரவு கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, மைக்கேல் தவெக ஆதரவாளராக முன்பு செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. ஆனால், இவர், தவெக கட்சியி்ல் உறுப்பினராகவோ, நிர்வாகியாகவோ இல்லை என அப்பகுதி தவெக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.