தினேஷ் ராஜ்
சென்னை: போதைப் பொருள் வழக்கில் இணை தயாரிப்பாளர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கொடுத்த தகவலின்பேரில் சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தல் மற்றும் பதுக்கலுக்கு எதிரான நடவடிக்கையை சென்னை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக திருமங்கலம் போலீஸாருடன் சென்னை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் கடந்த 19-ம் தேதி திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணித்தனர்.
குறிப்பாக திருமங்கலத்தில் உள்ள பார்க் ரோடு பகுதியில் கண்காணித்தபோது அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த பாடியைச் சேர்ந்த தியானேஷ்வரன் (26) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அவரிடம் எல்எஸ்டி எனும் ஸ்டாம்பு வடிவிலான போதைப் பொருட்கள் இருந்தது.
இதனையடுத்து அந்த போதை ஸ்டாம்ப்களையும் 2 செல்போன்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேனாம்பேட்டையை சேர்ந்த சினிமா இணை தயாரிப்பாளர் முகமது மஸ்தான் சர்புதீன் (44), முகப்பேரைச் சேர்ந்த சீனிவாசன் (25), வளசரவாக்கத்தைச் சேர்ந்த சரத் (30) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.27.91 லட்சம், ஓஜி எனப்படும் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. சர்புதீன் சினிமா பிரபலங்கள், மாடலிங் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவதற்காக போதைப் பொருட்களை வைத்திருந்தாரா? இவரது பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என போலீஸார் விசாரணை நடத்தினர்.
அவரை காவலில் எடுத்து விசாரித்ததில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சினிமா தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் ராஜ் (39) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நடிகர் தனுஷின் அக்கா மகன் பவீஷ் நடிப்பில் ‘லவ் ஓ லவ்’ எனும் படம் தயாராகிறது. இதன் தயாரிப்பாளர்களில் ஒருவராக தினேஷ் ராஜ் உள்ளார் எனக் கூறப்படுகிறது.
இவரும், ஏற்கெனவே கைதான இணை தயாரிப்பாளர் சர்புதீனும் சேர்ந்து போதைப் பொருள் உட்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் இவர்கள் வேறு ஏதேனும் பார்ட்டிகளுக்கோ சினிமா பிரமுகர்களுக்கோ போதைப் பொருள் விற்பனை செய்தார்களா? எனவும் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.