சென்னை: மோசடி ஆவணங்கள் மூலம் வங்கிகளில் கடன் வாங்கி கோடிக்கணக்கில் மோசடி செய்த போலி வைர வியாபாரிகள் 4 பேருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆந்திரா வங்கிக் கிளையில் கடந்த 1999-2000-ம் ஆண்டில் ஆவணங்களை சரிபார்க்காமலும், முறையாக ஆய்வு நடத்தாமலும் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் கடன் வழங்கப்பட்டுள்ளதாக வந்த புகாரின் பேரில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.
சிபிஐ விசாரணையில் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள டி.என்.இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் வைர வியாபாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி போலியான ஆவணங்களையும், மும்பையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 2 சிறிய அறைகளை ரூ.1.40 கோடி மதிப்புடையது எனக்கூறியும் சென்னை ஆந்திரா வங்கியில் ரூ.5.75 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
அதையடுத்து ஆந்திரா வங்கியின் கிளை முதன்மை மேலாளர் பங்கஜா, மூத்த மேலாளர் எஸ்.வி.எஸ்.மூர்த்தி, ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் கிளை மூத்த மேலாளர் அர்ச்சனா ஷா, டி.என். இன்டர்நேஷனல் நிறுவன இயக்குநர்கள் கேத்தன் ஏ ஷா, முகேஷ் ஏ ஷா, அஸ்வின் ஏ ஷா, அந்நிறுவனத்தின் தலைவர் ரஷ்மிகாந்த் ஹிராலால் ஷா, மதிப்பீட்டாளர் விலாஸ் ஜெகந்நாத் பர்தா புர்கர், வினய் டி ஷா, ஹாங்காங்கில் உள்ள அராகி நிறுவன இயக்குநர் சஞ்சீவ் சந்திரகாந்த் ஷா உள்ளிட்டோர் மீது சிபிஐ அதிகாரிகள் கடந்த 2002-ம் ஆண்டு மோசடி, கூட்டுச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ரூ.47 கோடி மோசடி: இந்த வழக்கு விசாரணை சென்னை 11-வது கூடுதல் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி டி.பி.வடிவேலு முன்பாக நடந்தது. அப்போது சிபிஐ தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.அர்ஜுனன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, “குற்றம் சாட்டப் பட்டுள்ள மூர்த்தி, விலாஸ் ஜெகந்நாத், சஞ்சீவ் சந்திரகாந்த் ஷா ஆகியோர் உயிரிழந்ததால் அவர்கள் மீதான வழக்கு கைவிடப்பட்டது. இந்த வழக்கில் டி.என்.இன்டர்நேஷனல் நிறுவன இயக்குநர்களான கேத்தன், முகேஷ், அஸ்வின் மற்றும் ரஷ்மிகாந்த் என அனைவரும் கூட்டு சேர்ந்து வைர வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், கிரானைட் தொழிலில் ஈடுபடுவதாகவும் கூறி போலியான ஆவணங்களைத் தயாரித்து இதற்கு முன்பாக பல்வேறு வங்கிகளில் ரூ.47 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்துள்ளனர்.
ஆனால் இவர்களின் குற்ற பின்புலம் குறித்து ஆராயாமல், கடனுக்காக வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் அடமான சொத்துகளின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்யாமல் ஆந்திரா வங்கிக் கிளை அதிகாரிகளும் ரூ.5.75 கோடி வரை கடன் வழங்கியுள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கில் வங்கி அதிகாரிகள் பங்கஜா, அர்ச்சனா ஷா மற்றும் வினய் ஷா ஆகியோர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவர்களை விடுதலை செய்கிறேன்.
ரூ.20 லட்சம் அபராதம்: அதேநேரம், வங்கிகளில் மோசடியாக கடன் பெற்று ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ள கேத்தன் ஷா, முகேஷ் ஷா, அஸ்வின் ஷா, ரஷ்மிகாந்த் ஹிராலால் ஷா ஆகிய 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கிறேன். இந்த ரூ.20 லட்சத்தை அவர்கள் ஆந்திரா வங்கிக்கு இழப்பீடாகச் செலுத்த வேண்டும். தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்” எனத் தீர்ப்பளித்துள்ளார்.