க்ரைம்

சென்னை: மதுபோதையில் வீட்டுக்கு வந்ததால் தகராறு - மனைவியை கொன்ற கார் ஓட்டுநர் கைது

செய்திப்பிரிவு

மனைவியின் தலையை சுவற்றில் ஓங்கி அடித்து கொலை செய்த கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை போரூர் ஆர்.இ.நகரை சேர்ந்தவர் சத்யராஜ் (40). கார் ஓட்டுநர். இவரது மனைவி ரோசி. இவர்களுக்கு சூர்யா (9), நித்யா (7) என்ற குழந்தைகள் உள்ளனர். கடந்த 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று காலை அருகில் உள்ள பெரியம்மா வீட்டுக்கு வந்த குழந்தைகள் இருவரும், ”அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தகராறு. அம்மா இன்னும் எழுந்திருக்கவில்லை, அப்பாவையும் காணவில்லை” என கூறியுள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்களது பெரியம்மா, உறவினர்களை அழைத்துக் கொண்டு ரோசியின் வீட்டுக்கு சென்றார். அங்கு ரோசி இறந்து கிடந்ததார். இது குறித்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார், ரோசி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர். காணாமல் போன சத்யராஜை தேடி வந்தனர்.

இந்நிலையில், ஆதம்பாக்கம் பகுதியில் சுற்றித்திரிந்த சத்யராஜை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். 24-ம் தேதி இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த சத்யராஜுக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மனைவியின் தலையை பிடித்து சுவற்றில் ஓங்கி அடித்துள்ளார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பின்னர், இரவு முழுவதும் மனைவியின் சடலத்துடன் சத்யராஜ் வீட்டில் தூங்கியிருக்கிறார். காலையில், போதை தெளிந்தவுடன் குழந்தைகளை வீட்டில் தனியாக தவிக்கவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT