பாரதி (70) | பூஜா (28)
சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோடு செல்வதற்காக ரயிலில் ஏறிய போது , மூதாட்டியிடம் 3 சவரன் நகை திருடிய இரு பெண்களை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்தவர் பாப்பாத்தி (61). கடந்த செப்.4-ம் தேதி இவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஈரோடு செல்வதற்காக, இன்டர்சிட்டி ரயிலில் ஏறிய போது, அவரது கழுத்தில் கிடந்த மூன்று சவரன் நகை மாயமானது. இது குறித்து சென்ட்ரல் ரயில்வே போலீஸில் புகார் கொடுத்தார்.
இதன் பேரில், ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை தொடங்கினர். முதல் கட்டமாக, கண்காணிப்பு கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்து, கூட்ட நெரிசலை பயன்படுத்தி இரண்டு பெண்கள், மூதாட்டியிடம் செயின் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து கர்நாடகாவை சேர்ந்த பாரதி (70), பூஜா (28) ஆகிய இருவரை சென்ட்ரல் ரயில்வே போலீஸார் கைது செய்தனர். இவர்கள் இதேபோல வேறு ஏதாவது ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டி உள்ளார்களா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.