க்ரைம்

கொடைக்கானலில் 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்

ஆ.நல்லசிவன்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே மலைச் சாலையில் 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னையில் இருந்து காரில் 6 பேர் நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். கொடைக்கானல் மேல்மலை கிராமமான கூக்கால் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு காரில் கொடைக்கானலை சுற்றி பார்க்க சென்றுள்ளனர்.

          

பூம்பாறை அருகே ‘பழநி வியூ’ பகுதியில் சென்ற போது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 4 பேர் பலத்த காயத்துடனும், ஒருவர் லேசான காயத்துடனும் உயிர்தப்பியுள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்த கொடைக்கானல் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் 200 அடி பள்ளத்தில் இருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், விபத்து குறித்து கொடைக்கானல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பகுதியான மலைச்சாலையில் தடுப்பு சுவர் இல்லாததால் அடிக்கடி இதுபோன்று விபத்துகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர்.

SCROLL FOR NEXT