மதுரை: சித்திரைத் திருவிழாவின்போது ஏற்பட்ட மோதல் காரணமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறுவன் உள்பட 5 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
மீனாட்சி அம்மன் கோயில் அருகே வடக்கு ஆவணி மூல வீதிபகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான வாகனக் காப்பகம் செயல்படுகிறது.
இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு நின்றிருந்த குபேந்திரன் என்ற 17 வயது சிறுவனை, இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.
இதுகுறித்து விளக்குத்தூண் போலீஸார் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் பதிவுகளை ஆராய்ந்தனர். அதில் சிறுவன் குபேந்திரனை, 2 இரு சக்கர வாகனங்களில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.
அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற சிறுவனை விடாமல் துரத்திச் சென்று வெட்டி படுகொலை செய்துவிட்டு அக்கும்பல் தப்பிச் சென்றது தெரியவந்தது.
விசாரணையில், கடந்த மாதம் சித்திரைத் திருவிழாவின்போது, சிறுவன் குபேந்திரனுக்கும், முத்துமணி என்ற தொத்தல் முத்துமணி என்பவருக்கும் இடையே வடக்குமாசி வீதி அருகிலுள்ள கழிப்பறையில் மோதல் ஏற்பட்டது.
இதில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அதில் முத்துமணி காயமடைந்தார். இந்த முன்விரோதம் காரணமாக, ஆத்திரமடைந்த முத்துமணி குபேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டு காத்திருந்ததாக தெரிகிறது. அதன்படி, முத்துமணி, அவரது தம்பி ராஜ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் குபேந்திரனை சரமாரியாக வெட்டிக் கொன்றது.
இதுதொடர்பாக விளக்குத்தூண் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, திடீர் நகரரைச் சேர்ந்த முத்துமணி, அவரது தம்பி ராஜ், முத்துக்குமார், மேலவாசல் பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார், வடக்குமாசி வீதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்றும் கைதானவர்கள் தவிர வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கொலையான குபேந்திரன் மீது 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கொலையாளிகளை விரைந்து கைது செய்த போலீஸாரை, காவல் ஆணையர் அபிஷேக் தீக்சித் பாராட்டினார்.