வெடிகுண்டு மிரட்டல்
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டத்தையடுத்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு, இன்று (வியாழக்கிழமை) காலை தொடர்பு கொண்ட மர்ம நபர், பழநி முருகன் கோயிலில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்தார்.
இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், மோப்ப நாய் உதவியுடன் 10-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள், பழநி மலைக்கோயில், தேவஸ்தான அலுவலகம் மற்றும் 2.4 கி.மீ., தூரமுள்ள கிரிவலப் பாதை, அங்குள்ள முடி காணிக்கை செலுத்துமிடம், இலவச கழிப்பறை, குளியலறை, பக்தர்கள் காத்திருக்கும் மண்டபத்தில் தீவிர சோதனை நடத்தினர்.
இதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்ததையடுத்து போலீஸார், கோயில் நிர்வாகம் நிம்மதி அடைந்தனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, பழநி நகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே, கோயிலில் பாதுகாப்பு கூடுதலாக பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்க காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை ஆய்வு செய்தனர் போலீஸார், தொலைபேசியில் பேசிய நபர் திண்டுக்கல் பகுதியில் இருப்பது கண்டறிந்தனர். மேலும், திண்டுக்கல் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
அதில், தொலைபேசியில் பேசிய நபர் தருமபுரியை சேர்ந்த முனியப்பன் (24) என்பதும், பழநி முருகன் கோயிலில் சுவாமியை அருகில் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்காத கோபத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.