கோப்புப் படம்
சென்னை: தவெக இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதாக இருவரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் சாலமன் (26) தவெக உறுப்பினர் என கூறப்படுகிறது. இவர் தனது உறவினரை நேற்று முன்தினம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அப்போது சாலமனின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் விஜய் நடித்த திரைப்பட பாடல் ரிங்டோனாக ஒலித்தது.
அப்போது, அங்கு வந்த இருவர், சாலமனிடம், “ஏன் விஜய் பாடலை ரிங்டோனாக வைத்துள்ளாய்?” என கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் இருவரும் சாலமனை தாக்கி உள்ளனர்.
சம்பவம் குறித்து சாலமன் அளித்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் போலீஸார் நடத்திய விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த அம்பேத்கர் (35) மற்றும் செந்தில்குமார் (40) என்பது தெரியவந்தது. இதில், அம்பேத்கர் திமுக ஆதரவாளர் எனவும் செந்தில்குமார் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.