க்ரைம்

நெல்லை அருகே அசாம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 2 சிறுவர்கள் உட்பட மூவர் கைது

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: நெல்லை அருகே அசாம் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக இரண்டு சிறார்கள் உட்பட 3 பேரை கைது செய்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் தாலுகா, அரசர்குளம் பகுதியில் உள்ள தனியார் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்கு சேர்ந்துள்ளனர். திருநெல்வேலியில் வசித்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த முகமது மஹ்புல் ஹுசைன் (27) என்பவர் ஹாலோ பிளாக் நிறுவன உரிமையாளரிடம் கமிஷன் தொகை பெற்றுக் கொண்டு அவர்களை வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார்.

போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், சம்பளம் போதாது என்பதாலும் அவர்கள் வேலையில் இருந்து விலகுவதாக கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் நேற்று கேரள மாநிலத்துக்கு வேலைக்கு செல்ல முடிவு செய்தனர். இதற்காக அரசர்குளத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் இருவரும் திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்தனர்.

இதற்கிடையே, அவர்களை செல்போனில் தொடர்பு கொண்ட முகமது மஹ்புல் ஹுசைன் இங்கேயே வேலை செய்யுமாறு மிரட்டியுள்ளார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறிய அவர், மோட்டார் சைக்கிளில் இரண்டு இளம் சிறார்களுடன் சிவந்திபட்டி பகுதியில் நின்றுள்ளார்.

ஆட்டோ அங்கு சென்றதும் தம்பதியினர் கல்குவாரியில் இருந்து பணத்தை திருடிவிட்டதாக டிரைவரிடம் கூறிய முகமது மஹ்புல் ஹுசைன், அவர்கள் இருவரையும் அங்கிருந்து காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த பெண்ணின் கணவரை தாக்கிய முகமது மஹ்புல் ஹுசைன் உள்பட மூவரும் அவரது கண் எதிரிலேயே அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பல மணி நேரத்துக்கு பின் இருவரையும் சாலை பகுதியில் விட்டுவிட்டு மூவரும் தப்பியோடியிவிட்டனர்.

பாதிக்கப்பட்ட அந்த பெண் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பியோடிய முகமது மஹ்புல் ஹுசைன் மற்றும் இரண்டு இளம் சிறார்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கணவர் கண் எதிரிலேயே அசாம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT