ராம் ரகுநாத்
சென்னை: ஜிஎஸ்டி அதிகாரி போல் நடித்து, 1.5 கிலோ தங்க நகை பார்சல்களை ஏமாற்றி எடுத்துச் சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
சென்னை, சவுகார்பேட்டை, பெரியநாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் ராவல்சிங் (30)கூரியர் நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த 6-ம் தேதி மீனம்பாக்கம், விமான நிலைய கார்கோவில் வந்த இவர்களது கூரியர் நிறுவனத்தின் பார்சல்களில் 1.5 கிலோ தங்க நகைகள் அடங்கிய குறிப்பிட்ட சில பார்சல்களை மட்டும் எடுத்து வர, இவரது நிறுவனத்தில் வேலை செய்து வரும் கோவாராம் மற்றும் அதே கட்டிடத்தில் உள்ள மற்றொரு கூரியர் நிறுவனத்தில் வேலை செய்துவரும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜித்தேந்தர்குமார் (31) ஆகியோரை பைக்கில் அனுப்பி வைத்தார்.
ஆனால், வெகு நேரமாகியும் அவர்கள் திரும்பி வரவில்லை. இருவரது செல்போனும் சுவிட்ச்-ஆஃப் செய்யப்பட்டது.
சில மணி நேரத்துக்குப் பிறகு ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் செல்போனிலிருந்து பேசிய கோவாரம், “நாங்கள் இருவரும் தங்க நகைகள் அடங்கிய பார்சல்களை எடுத்துக் கொண்டு பைக்கில் திரும்ப வரும் வழியில், கிண்டி மேம்பாலம் அருகே 2 பேர் எங்களை வழிமறித்து, செங்கல்பட்டு ஜிஎஸ்டி அலுவலக அதிகாரிகள் எனக்கூறி எங்களிடமிருந்த பார்சல்களையும், செல்போன்களையும் வாங்கிக் கொண்டு, எங்கள் இருவரையும் ஆட்டோவில் அழைத்துச் சென்று பெருங்களத்தூர் அருகே இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக, கிண்டி காவல் நிலையத்தில் ராவல்சிங் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் பார்சலை எடுத்துச் சென்ற ஊழியர்களில் ஜித்தேந்தர்குமார் தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானிலிருந்து நண்பர்களை சென்னைக்கு வரவழைத்து, திட்டம் தீட்டி ஜிஎஸ்டி அதிகாரிகள் போல நடிக்க வைத்து தங்க நகை பார்சல்களுடன் சொந்த ஊருக்கு தப்பிச் சென்றது தெரிந்தது.
இதையடுத்து, ஜித்தேந்தர் குமார் கடந்த மாதம் 20-ம் தேதி கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த அவரது கூட்டாளியான குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ராம் ரகுநாத் (39) ராஜஸ்தானில் பதுங்கி இருந்த போது கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில், தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.