பொப்பலாட்டா ஸ்ரீனு
சென்னை: வீடு கட்டுவதற்காக சென்னையில் நகை பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர கொள்ளையன் கைது செய்யப்பட்டார். சென்னை, பெரம்பூர், முனியப்பன் தெருவில் வசித்து வருபவர் கல்யாணி (65).
இவர் கடந்த 3-ம் தேதி காலை, சந்தைக்குச் சென்று காய்கறி வாங்கி விட்டு பெரம்பூர், பாரதி 1-வது தெருவிலுள்ள பிள்ளையார் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த ஒரு இளைஞர், கல்யாணி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்தார். அதிர்ச்சி அடைந்த அவர், தங்கச் செயினை இறுகப்பிடித்துக்கொள்ளவே, செயினின் ஒரு பகுதி மட்டும் கொள்ளையன் கையில் சிக்கியது.
அதோடு கொள்ளையன் ஓட்டம் பிடித்தார். இந்த நகை பறிப்பு குறித்து செம்பியம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில், நகைப் பறிப்பில் ஈடுபட்டது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பொப்பலாட்டா னு (22) என்பது தெரிந்தது.
தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர். விசாரணையில், பொப்பலாட்டா னு சென்னையில், புறநகர் ரயிலில் ஏடிஎம் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளின் பவுச்களை விற்பனை செய்து வந்ததும், இவரது பெற்றோர் வீடுகட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால், நகை பறிப்பில் ஈடுபட்டதும், திருடிய தங்கச் செயினை விற்பனை செய்வதற்காக உருக்கி தங்கக் கட்டியாக மாற்றி வைத்திருந்ததும் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, அவரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.