கோப்புப்படம்
சென்னை: பொக்லைன் மோதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகன் உயிரிழந்த விவகாரத்தில், அதன் உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர். வாகனத்தை ஓட்டிய சிறுவன் சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
சென்னை, திருவான்மியூரை சேர்ந்தவர் உலகாதிபதி (21). மதுரை மாவட்டம், மேலூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ செல்வத்தின் மகனான இவர், செம்மஞ்சேரியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 22-ம் தேதி காலை தனது நண்பருடன் பைக்கில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார்.
கோட்டூர்புரம், சர்தா டேல் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஐஐடி நுழைவாயில் எதிரே பின்னால் வந்த பொக்லைன் வாகனம் அவர் சென்ற பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த உலகாதிபதி மீது பொக்லைன் வாகனத்தின் சக்கரம் ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து, மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பொக்லைன் வாகனத்தை ஓட்டியது 17 வயதுடைய ஒரு சிறுவன் என்பது கண்டறியப்பட்டது.
கனரக வாகனங்களை உரிய பயிற்சி பெற்றவர்களே இயக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும்போது. அஜாக்கிரதையாக ஒரு சிறுவனிடம் வாகனத்தை வழங்கியதற்காக, பள்ளிக்கரணையைச் சேர்ந்த வாகன உரிமையாளர் ராசகுமார் (34) என்பவரை போலீஸார் கைது செய்து, விபத்துக்கு காரணமான பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், வாகனம் ஓட்டிய சிறுவன், சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.