சென்னை: காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து சென்னை சிறு வழக்குகளுக்கான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர்கள் விமல், பிரபு, நடிகை ஆனந்தி உள்ளிட்டோர் நடித்த படம் மன்னர் வகையறா. இப்படத்தை தயாரிக்க திரைப்பட பைனான்சியர் கோபி என்பவரிடமிருந்து விமல் ரூ.4.5 கோடியை கடனாகப் பெற்றிருந்தார்.
இதற்காக விமல் வழங்கிய காசோலை வங்கியில் பணமின்றி திரும்பியதையடுத்து, அவருக்கு எதிராக சென்னை சிறுவழக்குகள் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கை கோபி தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை சென்னை 11-வது சிறு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்த்தி முன்பாக நடந்தது. விசாரணைக்காக நடிகர் விமல் நேரில் ஆஜராகியிருந்தார்.
பைனான்சியர் கோபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.வெங்கடேஷ், “நடிகர் விமல் வழங்கிய ரூ.4.5 கோடி காசோலை பணமின்றி திரும் பிய நிலையில், அந்த தொகையை கொடுக்க விமல் முன்வரவில்லை” என வாதிட்டார்.
அதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தும், வாங்கிய கடன் தொகையை முழுமையாக திருப்பி செலுத்தவும் உத்தரவிட்டார்.
தண்டனை நிறுத்திவைப்பு
அதைத்தொடர்ந்து, இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், எனவே தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும் விமல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து விமலுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.