காரைக்குடி: காரைக்குடி அருகே லாரி - கார் நேருக்கு, நேர் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை, மகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வாகைக்குடியைச் சேர்ந்தவர் கணேசன் (39). இவர் கரூரில் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தனது மகள் அபிநயா (6), மனைவியின் சகோதரி மகள் சரிதா (16) ஆகியோருடன் காரில் கரூரில் இருந்து வாகைகுடிக்கு சென்றார். திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில், காரைக்குடி அருகே சங்கரபதி என்ற இடத்தில் காரும், தேவகோட்டை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் அரிசி மூடைகளை இறக்கிவிட்டு காரைக்குடிக்கு திரும்பி கொண்டிருந்த லாரியும் நேருக்கு நேர் மோதின.
இதில் காரில் இருந்த கணேசன், அபிநயா, சரிதா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் கொத்தங்குளத்தைச் சேர்ந்த காளிமுத்து (40) காயமடைந்தார். கார் முற்றிலும் சேதமடைந்ததால், உயிரிழந்தவர்களின் உடலை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் போலீஸார் மீட்டனர். லாரி ஓட்டுநர் காளிமுத்துவை காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உதவி எஸ்பி ஸ்டாலின் விசாரணை நடத்தினார். இதுகுறித்து சோமநாதபுரம் போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.