செங்குன்றம்: சென்னை, புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் சிறையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பெண் கைதிகளை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பார்த்துவிட்டு பழம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி விட்டு சென்றுள்ளனர். இந்த பொருட்களை உரியவர்களுக்கு வழங்கும் பணியில் சிறை காவலர் அயரின் ஜெனட் ஈடுபட்டார்.
அப்போது, திருப்பூர் மாநகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில் கடந்த மாதம் 23-ம் தேதி கைதாகி சிறையில் உள்ள உகாண்டா நாட்டைச் சேர்ந்த நசாமா சரோம்( 35), தனக்குவந்த பழம் மற்றும் பொருட்களை சிறை காவலரிடம் கேட்டார்.
அதற்கு உங்களுடைய டோக்கனை கொடுங்கள், வரிசையாக நில்லுங்கள் என்று சிறை காவலர் அயரின் ஜெனட் சொன்னதாக தெரிகிறது. இதில் கோபமடைந்த நசாமா சரோம் சிறை காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, புகாரின்பேரில், போலீஸார் விசாரிக்கின்றனர்.