திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 68 பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.2 லட்சம் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுவின்னுவாம்பட்டு கிராமத்தில் வசிப்பவர் தேவன்(54). இவர், சிமென்ட் விற்பனை தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுந்தரி(50). இவர், காலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர்கள் இருவரும், சென்னையில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் கடந்த 19-ம் தேதி சென்றுள்ளனர். பின்னர், அவர்கள் திங்கள்கிழமை நள்ளிரவு வீடு திரும்பி உள்ளனர்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தது. அலமாரிகளின் பூட்டை உடைத்து, அதிலிருந்த 68 பவுன் தங்க நகை, ரூ.2 லட்சம், 3 கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கலசப்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றுவிட்டது.
தேவன் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இது குறித்து கலசப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.