நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் 500 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸார், 3 பேரை கைது செய்துள்ளனர்.
நத்தத்துக்கு காரில் குட்கா கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நத்தம் காவல் நிலையஆய்வாளர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீஸார், நத்தம்-அய்யாப்பட்டி சாலையில் உள்ள தேங்காய் கிட்டங்கியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த சொகுசு காரில் விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், குட்கா கடத்தி வந்த ஊராளிபட்டியைச் சேர்ந்த சுதாகர் (35), நத்தத்தைச் சேர்ந்த இசாக் (34) மற்றும் ஜஹாங்கீர் (37) ஆகிய 3 பேரை கைது செய்து, கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய ஓட்டுநர் ராகுல், நாகராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.