தஞ்சை: தேவராயன்பேட்டையில் முன்னாள் திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் கொலை செய்த வழக்கில் கணவன், மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் தேவராயன்பேட்டையைச் சேர்ந்தவர் தங்க. அண்ணாமலை (55), முன்னாள் திமுக ஒன்றியக் குழு உறுப்பினரான, இவரது வீட்டில் போடப்பட்டிருந்த வேலியை, கடந்த 16ம் தேதி, இவரது வீட்டின் அருகில் வரும் சபாபதி (52) மற்றும் இவரது மனைவி ராதா (46) ஆகியோர் சேதப்படுத்தி, தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அண்ணாமலை, அவர்களிடம் கேட்ட போது, கணவன் மனைவி 2 பேரும் சேர்ந்து, அவரை கற்களால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அண்ணாமலையை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் 17-ம் தேதி இரவு உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து பாபநாசம் போலீஸார், கணவன் மனைவி 2 பேர் மீது கொலை வழக்குப் பதிந்து, நேற்று 18ம் தேதி கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.