விருதுநகர்: சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சாவை, விருதுநகரில் போலீஸார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
சென்னையில் இருந்து குருவாயூர் சென்ற விரைவு ரயில் திருச்சி வந்த போது எஸ்-1 கோச்சில் வந்த இளைஞர் ஒருவர் ஒரு டிராவல் பேக்கை கொண்டு வந்துள்ளார். அவரது நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்ததால், சக பயணிகள் ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து ரயில் மணப்பாறை வந்த போது, ரயில்வே போலீஸார் ரயிலுக்குள் ஏறி அதிரடியாகச் சோதனை நடத்தினர்.
இதை பார்த்த அந்த இளைஞர், டிராவல் பேக்கை இருக்கையிலேயே வைத்து விட்டு தப்பிச் சென்றார். பின்னர், ரயில் மதுரை வந்த போது சந்தேகத்துக்கு இடமாக இருந்த டிராவல் பேக்கை ஆர்பிஎப் போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார் கண்காணித்தனர். ஆனால், யாரும் பேக்கை எடுக்க வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், விருதுநகர் ரயில் நிலையத்தில் மர்ம பேக்கை கைப் பற்றி திறந்து பார்த்தபோது அதில் 6 பொட்டலங்களில் 15 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து அவற்றை, மதுரையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த நபர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.