ஸ்ரீதர் 
க்ரைம்

கோவை | போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவி: காவலர், வழக்கறிஞர் கைது

செய்திப்பிரிவு

கோவை: கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், பெங்களூருவில் இருந்து மெத்தாபெட்டமைன் என்ற போதைபொருளை வாங்கி வந்து கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், ஐடி ஊழியர்கள் உள்ளிட்டோரை குறி வைத்து விற்பதாக சரவணம்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் ரத்தினபுரியைச் சேர்ந்த சுஜிமோகன் தலைமையிலான கும்பலைச் சேர்ந்தவர்கள் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

இதையடுத்து, தனிப்படை போலீஸார், கடந்த ஏப்ரலில் பெங்களூருவில் தலைமறைவாக இருந்த சுஜிமோகன், அஸ்வின் குமார், அமர்நாத், பிரசாந்த், ராஜேஷ், பிரவீன்ராஜ், பிரதீப் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

அவர்களது செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது, சுஜிமோகன் உள்ளிட்டோரிடம் வாட்ஸ்அப் மூலம் ஒருவர் பலமுறை பேசியது தெரியவந்தது. அந்நபர் பேசியது தொடர்பான 30-க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் இருந்தன.

விசாரணையில், கடத்தல் கும்பலுக்கு உதவி செய்தவர், கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் தர்(32) என்பது அம்பலமானது. போதைப் பொருட்களை விற்கும் ரவுடி கும்பலுக்கு பணத்தை பங்கு போட்டு பிரித்துக் கொடுத்து வந்தது அங்காளம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆசிக்(30) என்பது தெரிந்தது.

இவர்கள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பிக்க ஏதுவாக அவர்கள் மீதான போலீஸாரின் நடவடிக்கையை ரகசியமாக தெரிவித்து வந்ததும் அம்பலமானது. இதையடுத்து காவலர் தர், வழக்கறிஞர் ஆசிக் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

போதைப் பொருட்களை விற்கும் கும்பல் கொடுத்த பணத்தை பெற்றுகொண்டு, காவலர் தர், வழக்கறிஞர் ஆசிக் ஆகியோர் கொடைக்கானல், கோவா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பொழுதுபோக்கியது விசாரணையில் தெரியவந்தது.

SCROLL FOR NEXT