சியாட்டில்: அமெரிக்க நாட்டின் சியாட்டில் பகுதியில் அமைந்துள்ள ஆப்பிள் ஸ்டோரில் சினிமா பாணியில் சுவற்றில் துளையிட்டு நுழைந்து கைவரிசையை காட்டியுள்ளனர். இந்திய மதிப்பில் ரூ.4.10 கோடி மதிப்புள்ள 436 ஐபோன்களை அவர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனை அந்நாட்டின் உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளது.
சியாட்டில் பகுதியில் உள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு பக்கத்தில் அமைந்துள்ள ‘சியாட்டில் காபி கியர்’ காபி கடையின் கதவை உடைத்து அதன் பாத்ரூம் சுவற்றை துளையிட்டு ஆப்பிள் ஸ்டோருக்கு திருடர்கள் சென்றுள்ளனர். இது குறித்து காபி கடையின் சிஇஓ ட்விட்டர் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் 2 பேர் இதை செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் வணிக வளாகத்தின் கட்டிட வரைபட அணுகல் இருப்பவர்கள் மட்டுமே இதை செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காபி கடை மற்றும் ஆப்பிள் ஸ்டோர் அமைந்துள்ள ஆல்டர்வுட் மாலில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. வழக்கமாக திருடர்கள் நகை, பணம் மற்றும் வங்கியில் கொள்ளை அடிப்பார்கள். ஆப்பிள் ஸ்டோரில் அவர்கள் கைவரிசை காட்டி இருப்பது ஆப்பிள் நிறுவன தயாரிப்புக்கு கள்ள சந்தையில் உள்ள டிமாண்டை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
இந்தியா உட்பட உலகம் முழுவதும் சுமார் 25 நாடுகளில் ஆப்பிள் நிறுவனம் 552 ஆப்பிள் ஸ்டோர்கள் இயங்கி வருகின்றன. இதில் இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.