விழுப்புரம்: கடந்த 2021-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பதவி வகித்தவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்பி ஒருவர் புகார் கூறியிருந்தார். இதையடுத்து புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி, அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, சிபிசிஐடி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது சிபிசிஐடி போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, அவர்கள் இருவர் மீதும் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் வழக்கில் அனைத்து அரசுத் தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நிறைவடைந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று காலை வழக்குவிசாரணைக்கு வந்தபோது குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
இதையடுத்து பெண் எஸ்பி கூறிய பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாகவும், இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள 68 அரசுத் தரப்பு சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள்அளித்துள்ள பதில்கள் தொடர்பாகவும், முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோரிடம் நடுவர் புஷ்பராணி தனித்தனியாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தி அவர்கள் அளித்த பதில்களை பதிவு செய்தார்.
இதில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 297 கேள்விகளும், முன்னாள் செங்கல்பட்டு எஸ்பிக்கு 75 கேள்விகளையும் தயார் செய்துள்ள நிலையில் காலையில் இருந்து மாலை வரை முன்னாள் சிறப்பு டிஜிபியிடம் நடுவர் புஷ்பராணி கேள்விகளை எழுப்பி அதற்கு அவர் அளித்து வரும் பதில்களை பதிவு செய்தார்.
இதில் நீதிமன்ற நேரம் முடிவதை சுட்டிக்காட்டி மீதமுள்ள கேள்விகளுக்கான பதிலை சொல்வதற்கு தங்களுக்குகால அவகாசம் வழங்க வேண்டும் என முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் நடுவரிடம் முறையிட்டனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நடுவர் புஷ்பராணி, நள்ளிரவு நேரத்தை கடந்தாலும் கூட பரவாயில்லை, அனைத்து கேள்விகளுக்கும் இன்றே பதில் சொல்லிவிட்டு தான் இருவரும் செல்ல வேண்டும் என கண்டிப்புடன் கூறிவிட்டு தொடர்ந்து தனது கேள்விகளை கேட்டு பதிவு செய்தார். இதனால் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.