கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 3 பேரை திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லும் போலீஸார். 
க்ரைம்

விவசாயி கொலை வழக்கில் சகோதரர்கள் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

செய்திப்பிரிவு

திருச்சி: முசிறி அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரர்கள் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தும்பலம் கேணிப்பள்ளம் காட்டுக்கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் தனது மகன்கள் அண்ணாவி(62), முருகேசன்(48), பெரியசாமி(45) ஆகிய மூவருக்கும் சொத்துக்களை பிரித்து தர முடிவு செய்தார்.

அப்போது, முருகேசனுக்கு விவசாய நிலத்தையும், மற்ற இருவருக்கும் நிலத்துக்கு ஈடாக பணத்தையும் கொடுத்து பாகப்பிரிவினை செய்தார். ஆனால், இதில்அண்ணாவி, பெரியசாமிக்கு உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது. இதனால் முருகேசனுக்கும், மற்றஇருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 7.1.2018-ம் தேதி தனது நிலத்தில்விவசாயப்பணிகளை மேற்கொண்டிருந்த முருகேசனிடம் அங்கு வந்த பெரியசாமி, அண்ணாவி, அவரது மகன் சத்யராஜ்(29) ஆகிய 3 பேரும் விவசாய நிலத்தில் பங்கு வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் முருகேசனை 3 பேரும் சேர்ந்து மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த முருகேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே முருகேசன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் முசிறி போலீஸார் வழக்குப் பதிவு செய்துபெரியசாமி, அண்ணாவி, சத்யராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

தீர்ப்பு அறிவிப்பு: இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி ஜெயக்குமார் நேற்று தீர்ப்பளித்தார்.

அப்போது, இவ்வழக்கின் முதல் குற்றவாளியான சத்யராஜூக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும், கொடுங்காயம் ஏற்படுத்தியமைக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 2-வது குற்றவாளியான பெரியசாமிக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும், 3-வது குற்றவாளியான அண்ணாவிக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும் மற்றும்கொடுங்காயம் ஏற்படுத்தியமைக்காக ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இந்ததண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கலாம் எனவும் நீதிபதிதனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இதையடுத்து பெரியசாமி, அண்ணாவி, சத்யராஜ் ஆகிய 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT