க்ரைம்

முன்னாள் காதலியின் திருமணத்துக்கு பரிசாக வழங்கிய ‘ஹோம்-தியேட்டர்’ வெடித்து மணமகன் உயிரிழப்பு: சத்தீஸ்கரில் முன்னாள் காதலன் கைது

செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: முன்னாள் காதலியின் திருமணத்துக்கு வெடிகுண்டு பொருத்திய ஹோம்-தியேட்டரை பரிசாக வழங்கி மணமகன் மற்றும் அவரது சகோதரரை கொன்றவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து சத்தீஸ்கர் மாநில போலீஸார் கூறியுள்ளதாவது.

கபீர்தம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சார்ஜு மார்க்கம் (33). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தனக்கு திருமணம் ஆகவில்லை எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 29 வயதான பெண்ணை காதலித்து வந்துள்ளார். சார்ஜு மார்க்கத்துக்கு திருமணம் ஆனது தெரிந்ததால் அவரை விட்டு அப்பெண் விலகியுள்ளார்.

அதற்கு உடன்பட மறுத்த சார்ஜு, இரண்டாவது மனைவியாக வைத்துக் கொள்வதாக கூறி அந்தப் பெண்ணை வற்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், ரெங்காகர் கிராமத்தில் வசிக்கும் ஹேமந்த்ரா மராவி என்பவருக்கு அந்தப் பெண்ணை அவரது பெற்றோர் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்த திருமணம் மார்ச் 31-ம் தேதி நடைபெற்றுள்ளது.

அந்தப் பெண்ணின் முன்னாள் காதலரான மார்க்கம் திருமணப் பரிசாக வெடிகுண்டு பொருத்திய ஹோம் தியேட்டரை அந்தப் பெண்ணுக்கு வழங்கியுள்ளார்.

கல்யாணப் பரிசாக கிடைத்த ஹோம் தியேட்டரை ஆசையுடன் பயன்படுத்த அதற்கான வயரை மின்சார பிளக்கில் சொருகிய போது பயங்கர சத்தத்துடன் அது வெடித்துள்ளது. இதில், புது மாப்பிளையான ஹேமந்த்ரா மராவி மற்றும் அவரது சகோதரர் உயிரிழந்தனர். அருகில் நின்று கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை உள்பட அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து மத்திய பிரதேசம் பால்காட்டிலிருந்து 100 கி.மீ. தொலைவில் பதுங்கியிருந்த சார்ஜு மார்க்கம் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் ஏற்கெனவே கல்குவாரியில் வேலைபார்த்து வந்த அவர் ஹோம் தியேட்டரில் 2 கிலோ வெடிமருந்தை நிரப்பி அதனை மின்சாரத்தில் இணைக்கும்போது வெடிக்கும் வகையில் அமைத்துள்ளார்.

மார்க்கம் மீது கொலை வழக்கு, கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT