சீனிவாஸ் நாயக் 
க்ரைம்

தாம்பரம் | ஈவ்டீசிங் புகாரில் எஸ்ஐ சஸ்பெண்ட்: ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி

செய்திப்பிரிவு

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலைய சுரங்கப்பாதையில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் இந்தியில் தகாத வார்த்தைகளால் பேசி அந்த பெண்ணை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட உறவினரையும் தாக்கியுள்ளார்.

இதனைக் கண்ட பொதுமக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து விசாரித்தபோது அவர் தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சீனிவாஸ் நாயக் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் தாம்பரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை ரயில்வே காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்த அவர் திடீரென காவல் நிலையத்தில் இருந்து வெளியே ஓடிச்சென்று தாம்பரம் நோக்கி வந்த ரயில் முன்பு பாய்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக எமர்ஜென்சி பிரேக் பிடித்து ரயிலை நிறுத்தியதால் அவர் உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் ராஜய்யா சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT