மதுரை: ஈமு கோழி வளர்ப்பு நிறுவன மோசடி வழக்கில் நிறுவன மேலாண் இயக்குநர் உட்பட 2 பேருக்கு சிறைத் தண்டனையும், ரூ.2.83 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்ட ஈமு கோழிப் பண்ணை தனியார் நிறுவனம், நெல்லை மாவட்டத்திலும் செயல்பட்டது. தங்களது பண்ணையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி பலரிடம் 2012-ல் பணம் வசூலித்தனர். சில மாதங்கள் லாபத்தில் பங்கு கொடுத்தனர். இதையடுத்து மேலும் பலர் முதலீடு செய்தனர். அதிக முதலீடுகளை வசூலித்த நிலையில் திடீரென நிறுவனம் மூடப்பட்டது. அதை நடத்தியவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
இதுதொடர்பாக ஈமு கோழி வளர்ப்பு நிறுவனம், மேலாண் இயக்குநர் மயில்சாமி மற்றும் சக்திவேல் ஆகியோர் மீது நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை பொருளாதாரக் குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் ஆஜராகி, நெல்லை பகுதியில் மட்டும் 141 பேரிடம் ரூ.2 கோடியே 50 லட்சத்து 67 ஆயிரத்து 500 மோசடி செய்துள்ளனர். இவர்கள் மீது ஏற்கெனவே ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் மோசடி செய்ததாக வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்களின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் நீதிபதி ஜோதி, ‘மேலாண் இயக்குநர் மயில்சாமிக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1.35 கோடி அபராதமும், ஈமு கோழி வளர்ப்பு நிறுவனத்துக்கு ரூ.1.35 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. சக்திவேலுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.13.51 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகையை 135 டெபாசிட்தாரர்களுக்கு உரிமையியல் நீதிமன்றம் மூலம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.