க்ரைம்

திருப்பத்தூர் அருகே தாய், மகன் கொலை வழக்கில் முதியவர் கைது

செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மண் அள்ளுவது தொடர்பான பிரச்சினையில் தாய், மகனை கொலை செய்த முதியவரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் அருகேயுள்ள துவார் பூமலைக் கண்மாய் பகுதியைச் சேர்ந்த சாத்தையா மனைவி அடக்கி (46). கணவர் இறந்த நிலையில் மகன் சின்னக்கருப்பனுடன் (26) வசித்து வந்தார். அடக்கி கூலி வேலையும், சின்னக்கருப்பன் ஓட்டுநராகவும் இருந்து வந்தனர்.

இந்நிலையில் மார்ச் 26-ம் தேதி இரவு இருவரும் காயங்களுடன் இறந்து கிடந்தனர். இதுகுறித்து நெற்குப்பை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில், தாய், மகனை கொலை செய்தது பூலாங்குறிச்சி புதுவளவைச் சேர்ந்த சின்னையா (எ) சுழியன் (65) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: சின்னையா கட்டுமானப் பணிக்காக சின்னக் கருப்பனிடம் மண் கேட்டுள்ளார். அவரும் அரசு புறம்போக்கு நிலத்தில் மண் அள்ளுவதற்கு யோசனை தெரிவித்துள்ளார். அதன் பிறகு மறுத்துள்ளார். இதை யடுத்து சின்னையா வேறு நபர் மூலம் அள்ள முயற்சித்துள்ளார்.

ஆனால் அதற்கு சின்னக்கருப்பன் தடையாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்னையா, சின்னக்கருப்பனை கட்டையால் தாக்கி கொலை செய்தார். இதை பார்த்த அவரது தாயார் அடக்கியையும் தாக்கி கொலை செய்தார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT