ஏஎஸ்பி பல்பீர்சிங் 
க்ரைம்

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக சர்ச்சை: அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: காவல்துறையின் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கியதாக எழுந்து உள்ள சர்ச்சையை அடுத்து அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்பீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக பல்பீர்சிங் பொறுப்பு வகித்தார். சிறிய குற்றங்களுக்காக காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்ததாக இவர் மீது புகார் எழுந்துள்ளது.

10-க்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு தண்டனை அளித்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா என்பவரை, அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவை உடைத்து பிரச்சினை செய்ததாக போலீஸார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரது பற்களை ஏஎஸ்பி பல்பீர்சிங் பிடுங்கி எடுத்தாக புகார் எழுந்தது. அத்துடன் அவர்களது வாயில் ஜல்லிக் கற்களை போட்டு கொடுமைப்படுத்தியதாகவும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

ஏஎஸ்பி பல்பீர் சிங், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனிடையே இந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமதுசபீர் ஆலத்துக்கு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். உரிய புகார்கள் வரப்பெற்றதும் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இதனிடையே ஏஎஸ்பி பல்பீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT