ராஜவர்மன் 
க்ரைம்

ஸ்ரீவில்லி. | தொழிலதிபரை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்: முன்னாள் எம்எல்ஏ உட்பட 6 பேர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சக்தி நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். தொழிலதிபரான இவர், சாத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், தங்கமுனியசாமி, இ.ரவிச்சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து பட்டாசு ஆலை நடத்தி வந்தார்.

2019-ல் ராஜவர்மன் உள்ளிட்ட 3 பேரும், தங்களது பங்குத் தொகையைப் பெற்றுக் கொண்டு, தொழிலை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். இந்நிலையில், ராஜவர்மன் உள்ளிட்டோர் போலி ஆவணம் தயாரித்து, ரவிச்சந்திரனை கடத்திச் சென்று தலா ரூ.2 கோடி கேட்டுமிரட்டி உள்ளனர். இதற்கு அப்போது டிஎஸ்பியாக இருந்த ராஜேந்திரன், எஸ்எஸ்ஐ முத்துமாரியப்பன் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஸ்ரீல்லிபுத்தூரில் உள்ள மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்தநீதிபதி வள்ளி மணாளன், குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் உள்ளதால், முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன், ஓய்வுபெற்ற டிஎஸ்பி ராஜேந்திரன் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, முன்னாள் எம்எல்ஏராஜவர்மன்(52), தங்க முனியசாமி(30), நரிக்குடி ஊராட்சி ஒன்றியதுணைத் தலைவர் ஐ.ரவிச்சந்திரன்(53), அவரது மனைவி அங்காள ஈஸ்வரி(50), ஓய்வுபெற்ற டிஎஸ்பி ராஜேந்திரன், எஸ்எஸ்ஐ முத்துமாரியப்பன் ஆகிய 6 பேர்மீது ஆள் கடத்தல், மிரட்டி பணம்பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT