ஆர்.அமித்குமார், எஸ்.அமித்குமார், சுலைமான், அமித் 
க்ரைம்

கோவை | மத்திய அரசு தேர்வில் ஆள்மாறாட்டம்: ஹரியாணாவை சேர்ந்த 4 பேர் கைது

செய்திப்பிரிவு

கோவை: கோவையில் நடைபெற்ற மத்திய அரசு பணிக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் ஹரியாணாவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ளது மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மர பெருக்கு நிறுவனம். இந்த நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர்.

புகைப்படம், கைரேகை பதிவு: எழுத்து தேர்வு கடந்த மாதம் 4-ம் தேதி கோவையில் நடைபெற்றது. தேர்வு எழுத வந்தவர்களின் புகைப்படம் மற்றும் கைரேகை உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டன. நேற்று முன்தினம் இந்த பணிக்கான நேர்முகத் தேர்வு நடந்தது.

இதில் பங்கேற்ற 4 பேரின் புகைப்படம் மற்றும் கை ரேகை மாறுபட்டு இருந்தது. சந்தேகத்தின்பேரில் அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

ஆங்கிலம் தெரியவில்லை: ஆங்கிலத்தில் பேசவும், எழுதிக்காட்டவும் கூறினர். அவர்கள் செய்யமுடியாமல் திணறினர். அவர்கள் ஆள்மாறாட்டம் செய்து எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தது கண்டறியப்பட்டது.

உடனடியாக சம்பவம் குறித்து வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குநர் குனிக்கண்ணன் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஆர்.அமித்குமார்(30), எஸ்.அமித்குமார்(26), அமித்(23), சுலைமான்(25) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT