க்ரைம்

சென்னை | கன்டெய்னர் லாரி திருடன் கைது

செய்திப்பிரிவு

சென்னை: நாகப்பட்டினம் மாவட்டம் பொன்செய் தரங்கம்பாடியைச் சேர்ந்தவர் விக்னேஷ்(32). கன்டெய்னர் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த 12-ம் தேதி இரவு சென்னை துறைமுகத்தில் இருந்து லாரியில் சரக்கு ஏற்றிக் கொண்டு வேலூருக்குப் புறப்பட்டார். வழியில் மாதவரம், 200 அடி ரோடு, சின்ன ரவுண்டானா அருகில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டலில் சாப்பிடச் சென்றார்.

திரும்பி வந்து பார்த்தபோது, அவரது கன்டெய்னர் லாரி திருடு போயிருந்தது. அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், இதுகுறித்து மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். ரோந்து போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாதவரத்தை தாண்டி சென்று கொண்டிருந்த திருடுபோன கன்டெய்னர் லாரியை ரோந்து போலீஸார் மடக்கிப் பிடித்தனர். லாரியை ஓட்டிச் சென்ற செங்குன்றம், பள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த ராபர்ட் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இதேபோல், பலரின் கன்டெய்னர் லாரிகளைத் திருடி, அந்த லாரிகளின் உதிரி பாகங்களைக் கழற்றி அவற்றை விற்பனை செய்வதை ராபர்ட் வழக்கமாக கொண்டிருந்தது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT