நாகர்கோவில்: இரணியலை அடுத்த மணக்காவிளையை சேர்ந்த சுரேஷின் சகோதரி சுதா. இவர் தெரிசனங்கோப்பில் வசித்து வந்த நிலையில் இரு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்.
இதனால் சுதாவின் 17 வயது மகள் உட்பட இரு குழந்தைகளும் சுரேஷின் பராமரிப்பில் இருந்து வந்தனர். சுதாவின் மகள் நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில், அடிக்கடி தாயார் நினைவை கூறி உறவினர்களிடம் சோகமாக பேசி வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த சத்து மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து இரணியல் போலீஸார் விசாரிக்கின்றனர்.