க்ரைம்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து - காயமடைந்த 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலை தீ விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளர்கள் இருவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தனர்.

விருதுநகர் பட்டம்புதூர் அருகே உள்ள கோட்டநத்தம் கிராமத்தில் ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த ஆலையில் 40 அறைகளில் பேன்ஸிரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

வழக்கம் போல் நேற்று காலையும் இந்த ஆலையில் பட்டாசு உற்பத்தியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஒரு அறையில் பட்டாசு திரிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு திரி சுற்றியபோது உராய்வு காரணமாக திடீரென பட்டாசு திரிகளில் தீப்பற்றியது. இந்த விபத்தில், அந்த அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த சேடப்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (42), கட்டனார்பட்டியைச் சேர்ந்த கருப்பையா (60) ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். தகவலறிந்த விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

மேலும், காயமடைந்த முத்துப் பாண்டியும் கருப்பையாவும் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் மேல் சிகிச்சைக்காக அவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT