க்ரைம்

விழுப்புரம் | அன்பு ஜோதி இல்ல ஆசிரம நிர்வாகிகளை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு தாக்கல்

செய்திப்பிரிவு

விழுப்புரம்: விழுப்புரம் அன்பு ஜோதி இல்ல ஆசிரமநிர்வாகிகளை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிசிஐடி போலீஸார், விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரம் அருகேயுள்ள குண்டலபுலியூரில் செயல்பட்டு வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில், மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகளைத் துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் உள்ளிட்ட 9 பேரை கெடார் போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதையடுத்து, சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில், 4 ஆய்வாளர்கள் மற்றும் சிபிசிஐடி காவலர்களைக் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெங்களூரு விரைந்த போலீஸார்: கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம மேலாளர் பிஜு மோகன் மற்றும் ஆசிரமப் பணியாளர்கள் உள்ளிட்ட 9 பேரையும், 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், சிபிசிஐடி போலீஸார் 7 பேர் கொண்ட குழுவினர் நேற்றுவிழுப்புரத்தில் இருந்து பெங்களூருவுக்கு விரைந்தனர். அவர்கள் பெங்களூரு தொட்டக்குப்பி பகுதியில் உள்ள ஜூபின் பேபியின் நண்பரான ஆட்டோ ராஜாவுக்குச் சொந்தமான ஆசிரமத்துக்குச் சென்று, விசாரணை மேற்கொண்டனர்.

குண்டலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து, பெங்களூரு ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட 53 பேரில், 11 பேர் அங்கிருந்து எப்படி தப்பினர்? தற்போது எத்தனை பேர் உள்ளனர் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதுடன், சில ஆவணங்களைக் கைப்பற்றி, அதனடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்துஇதுவரை 20 பேர் காணாமல் போனதாகக் கூறப்பட்டாலும், 6 பேர் காணாமல் போனதாக கெடார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜபருல்லா(70), தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த லட்சுமிஅம்மாள்(85), அவரது மகன் முத்து விநாயகம்(48) ஆகியோரது படங்களை வெளியிட்டு, போலீஸார் அவர்களைத் தேடி வருகின்றனர். இவர்கள் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக சிபிசிஐடி காவல் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT