திருட்டு வழக்கில் கைதான அர்ஜூன் ராஜ்குமார். 
க்ரைம்

வேலூர் | கோயிலுக்கு சென்றவர் வீட்டில் திருட்டு - 48 மணி நேரத்தில் சிகப்பு குல்லாவால் கைதான இளைஞர்

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூரில் சிவராத்திரி நாளன்று கோயிலுக்கு சென்றவர் வீட்டில் 11 பவுன் தங்க நகைகளை திருடிய இளைஞர், திருடும்போது அணிந்திருந்த குல்லாவுடன் மீண்டும் அதே வீட்டின் முன்பாக நடமாடியபோது காவல் துறையினர் கைது செய்தனர்.

வேலூர் அடுத்த சித்தேரி குமரவேல் நகரைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (34). திருமணங்களுக்கு பை தயாரித்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவர், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு கடந்த 18-ம் தேதி (சிவராத்திரி) இரவு 10 மணியளவில் குடும்பத்தினருடன் சென்றுவிட்டு அதிகாரலை 2 மணிக்கு வீடு திரும்பினார்.

அப்போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 11 பவுன் தங்க நகைகள், 250 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்களை திருடிச்சென்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து, அரியூர் காவல் நிலையத்தில் நரேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் செந்தில் குமார், உதவி ஆய்வாளர் ரேகா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அந்த வீட்டுக்கு அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கருப்பு உடையுடன் சிகப்பு குல்லா அணிந்திருந்த ஒல்லியான உடலமைப்பு கொண்டவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் யார் என அடையாளம் தெரியாத நிலையில் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, சித்தேரி ஆஞ்சநேயர் கோயில் தெருவைச் சேர்ந்த அர்ஜூன் ராஜ்குமார் (19) குறித்த தகவல் தெரியவந்தது. இவர், ஏற்கெனவே அடிதடி வழக்கில் அரியூர் காவல் நிலையத்தில் கைதாகி சிறை சென்றவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்திருப்பது தெரியவந்தது. அதே நேரம், நரேஷ் குமார் வீட்டில் காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது அர்ஜூன் ராஜ்குமார் தனது நண்பருடன் அந்த தெருவின் வழியாக சந்தேகத்துக்கிடமாக நடமாடி கொண்டிருந்தார்.

நரேஷ்குமார் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் அணிந்திருந்த சிகப்பு குல்லாவுடன் அர்ஜூன் ராஜ்குமார் அணிந்திருந்த சிகப்பு குல்லாவுடம் ஒத்துப்போனது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்ததும் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். மேலும், நரேஷ்குமார் வீட்டில் திருடிய தங்க நகைகள், வெள்ளி பொருட்களையும் உதவி ஆய்வாளர் ரேகா பறிமுதல் செய்ததுடன் திருட்டு சம்பவத்தின் போது அவர் அணிந்திருந்த கருப்பு உடையும் பறிமுதல் செய்தார்.

பூரி கட்டை மற்றும் வீட்டில் இருந்த சுத்தியை பயன்படுத்தி பீரோவை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்களை அர்ஜூன் ராஜ்குமார் திருடியுள்ளார். திருட்டு சம்பவம் நடைபெற்ற 48 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த காவலர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் பாராட்டினார்.

SCROLL FOR NEXT