திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை வழக்குகளில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை தனிப்படையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூரில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ம் தேதி அதிகாலை ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க ஐஜிகண்ணன் மேற்பார்வையில் டிஐஜி முத்துசாமி தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படையினர் விசாரணையில், ஹரியாணா மாநிலம் மேவாத் கொள்ளை கும்பலை சேர்ந்த 6 பேர் கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது. இவர்கள், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் தங்கியிருந்து கொள்ளையை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் ஹரியாணா மாநிலத்தில் முகாமிட்டு கொள்ளையர்களை தேடிவந்தனர்.
இதில், கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய நபர்களான ஹரியாணா மாநிலம் நூக் மாவட்டம் சோனாரி கிராமம் முகமது இலியாஸ் மகன் முகமது ஆரிப்(35) மற்றும் ஹரியாணா மாநிலம் புன்ஹானா மாவட்டம் பைமாகேரா கிராமம் ஷரூப்கானி மகன் ஆசாத்(37) ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களை, ஹரியாணா மாநிலத்தில் இருந்து விமானம் மூலமாக நேற்று நள்ளிரவு சென்னைக்கு அழைத்து வந்தனர். கொள்ளையர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.