ஹைதராபாத்: சிறுமி ஒருவரின் இன்ஸ்டகிராம் கணக்கை ஹேக் செய்து, அதன் மூலம் அந்த சிறுமியை மிரட்டி வந்த நபர் ஒருவர் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர் ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 வயதான பொறியியல் பட்டதாரியான அவர் அங்கு இயங்கி வரும் செங்கல் சூளையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலியான இன்ஸ்டா கணக்குகளின் ஊடாக இளம் பெண்களை குறிவைத்து அவர் செயல்பட்டு வந்துள்ளார். Phishing மூலம் அவர்களது கணக்கின் லாக்-இன் விவரங்களை சேகரித்து, அதை முடக்கி, மிரட்டியும் வந்துள்ளார். அந்த வகையில்தான் கடந்த 2021-ல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் படங்களை ஆபாசமாக மாற்றி சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்றும், தனக்கு வீடியோ கால் செய்யுமாறும் மனோஜ் மிரட்டி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி காவல் துறையில் புகார் கொடுத்தது தெரிந்ததும் தான் பயன்படுத்தி வந்த போனை அவர் தடயமாக சிக்காத வகையில் அழித்துள்ளார். இருந்த போதும் சிறப்பு குழு மேற்கொண்ட விசாரணையில் அவர் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கில் சிக்கியுள்ளார்.