கோப்புப்படம் 
க்ரைம்

விருத்தாசலம் அருகே பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதி நீர் தேக்கத் தொட்டியில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம்

என்.முருகவேல்

விருத்தாசலம்: விருத்தாசலத்தை அடுத்த ராஜேந்திரபட்டிணம் ஊராட்சியில் பட்டியலினத்தவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் பட்டதாரி மகன் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ராஜேந்திரபட்டிணம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் மகன் சரவணக்குமார். பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 10 தினங்களுக்கு முன் மாயமாகியுள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காதாதல் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலை பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள், மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியின் மீது ஏறி பார்த்தபோது, அழுகிய நிலையில் சடலம் இருப்பதை கண்டு, அதிர்ச்சியடைந்துள்ளனர். தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸார், தீயணைப்புதுறையினர் உடன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர்.

உயிரிழப்பு தொடர்பாக போலீஸார் கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம், சடலம் கிடந்த தொட்டியில் உள்ள நீரை பயன்படுத்திய கிராம மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

SCROLL FOR NEXT