ஓசூர்: கெலமங்கலம் அருகே நண்பரை அடித்துக் கொலை செய்த வழக்கில் வட மாநிலத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஒடிசா மாநிலம் ஜினாகார்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திகாம்பர் பேக் (39). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே பைரமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ் பகதூர்சிங் (49) என்பவரும் பணிபுரிந்து வந்தார்.
நண்பர்களான இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர். இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் மது போதையில் இருந்த நண்பர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ராஜ்பகதூர் சிங், இரும்பு கம்பியால் திகாம்பர் பேக்கை அடித்துக் கொலை செய்தார்.
இது தொடர்பாக கெலமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராஜ்பகதூர்சிங்கை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், ராஜ்பகதூர் சிங்குக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.