அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் திரவுபதி அம்மன் மற்றும் மண்டியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 22-ம் தேதி இரவு மயிலேறு திருவிழா நடைபெற்றது.
இதில், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த கிரேன் மூலமாக ஆகாயத்தில் தொங்கியபடி வந்து அம்மனுக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது, கிரேன் கவிழ்ந்து விழுந்த விபத்தில் பெரப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி (73), கீழ்வீதி ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த முத்துகுமார்(42), கீழ் வீதியைச் சேர்ந்த ஜோதிபாபு (17), கீழ்ஆவாதம் பகுதியைச் சேர்ந்த பூபாலன் (48) ஆகியோர் உயிரிழந்தனர்.
இது குறித்து நெமிலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பனப்பாக்கத்தைச் சேர்ந்த கிரேன் ஒட்டுநர் முருகன் (30) என்பவரை ஏற்கெனவே கைது செய்யப்பட்டார்.
மேலும், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பனப்பாக்கத்தைச் சேர்ந்த கிரேன் உரிமையாளர் அருண் (27) மற்றும் கீழ்வீதி கிராமத்தைச் சேர்ந்த விழாக் குழுவினர் சதீஷ் (21), படையப்பா (24), ராமதாஸ் (32), கண்ணன் (28), கலைவாணன் (26) ஆகிய 6 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.