க்ரைம்

தேன்கனிக்கோட்டை அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே அரசுப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை அருகே பிக்கனப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் மஞ்சுநாத் (43). இவர் பள்ளி மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் கோவிந்தன் விசாரணை நடத்தினார். விசாரணையில், ஆசிரியர் மீதான புகார் உறுதியானது.

இதையடுத்து, முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஆசிரியர் மஞ்சுநாத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு குழுவினர் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் காப்பக நன்னடத்தை அலுவலர் ரகுராமன் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, மஞ்சுநாத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT