க்ரைம்

பாரிமுனையில் ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: வாகன சோதனையில் சிக்கியது

செய்திப்பிரிவு

சென்னை: பாரிமுனையில் ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை வடக்கு கடற்கரை போலீஸார் நேற்று காலை பாரிமுனை ராஜாஜி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். அப்போது வாகனத்தில் வந்த இருவர், இருசக்கர வாகனத்துடன் தாங்கள் வைத்திருந்த பையை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினர்.

கட்டுக்கட்டாக பணம்

இதனால், சந்தேகம் அடைந்த போலீஸார் தப்பிய இருவரையும் விரட்டினர். அதில், ஒருவர் பிடிபட்டார். அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது கட்டுக்கட்டாக ரூ.70 லட்சம் ரொக்கம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்டது மண்ணடியை சேர்ந்த சகாபுதீன்(54) என்பதும், பர்மா பஜாரில் கடை வைத்துள்ளதும் தெரியவந்தது.

ஆனால், அவரிடம் பணத்துக்கான எந்த ஆவணமும் இல்லை. எனவே, அது ஹவாலா பணம் என தெரியவந்தது. இதையடுத்து ரூ.70 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த பணம் எங்கிருந்து, யாருக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க பறிமுதல்செய்யப்பட்ட ஹவாலா பணம்வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய மற்றொரு நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT