க்ரைம்

மதுரை | தோட்ட வேலைக்கு சென்ற ஓட்டுநர் கொலை - தலைமறைவான சிறுவனை தேடும் போலீஸ்

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை பழனியாண்டவர் கோவில் சாலை மலை அடிவாரத்தில் மினரல் வாட்டர் நிறுவனம் செயல்பட்டது. இந்நிறுவனம் தற்போது இயங்கவில்லை.

இங்குள்ள தோப்பில் பயிரிட்டுள்ள கத்தரிச் செடிகளை சோழவந்தான் பூ மேட்டுத் தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகன் சதீஸ்(30) கவனித்தார். இந்நிலையில் சதீஷ் பழநி பாதயாத்திரை செல்வதால், தனது அண்ணனான ஓட்டுநர் மருதுபாண்டி (40) நிறுவனத்தில் தங்கி இருந்தார். அவருடன், மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் தோட்ட வேலைக்காக தங்கி இருந்தார்.

இந்நிலையில், பழநி புறப்படும் முன்பாக அண்ணனிடம் தகவல் தெரிவித்துவிட்டு செல்லலாம் எனத் திட்டமிட்ட சதீஸ் மினரல் வாட்டர் நிறுவனத்துக்கு சென்றார். அங்கு மருதுபாண்டி பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். உடன் தங்கியிருந்த சிறுவனை காணவில்லை.

இது குறித்து சதீஸ் வாடிப்பட்டி போலீஸில் புகார் செய்தார். இது குறித்து ஆய்வாளர் நித்தியப்பிரியா வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார். சம்பவ இடத்தை எஸ்பி சிவபிரசாத், டிஎஸ்பி பாலசுந்தரம் ஆகியோர் ஆய்வு செய்தனர். போலீஸார் தலைமறைவான சிறுவனைத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT