கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பங்காரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், சமூக வலைதளம் மூலமாக காரைக்குடி பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவருடன் அறிமுகமானார்.
அந்த அறிமுகத்தைத் தொடர்ந்து அந்த பெண், ரவிக்குமாருடன் சமூக வலைதளங்களில் தகவல்களை பறிமாறி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ரவிக்குமார், சினிமாவில் நடிக்க வைப்பதாக அந்தப் பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி, நேரில் பார்க்க வேண்டி முகவரி கேட்டுள்ளார்.
அதற்கு சம்மதித்த பெண், முகவரி அளித்த நிலையில் அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்ற ரவிக்குமார், அந்தப் பெண்ணை ஏமாற்றி வீட்டிலிருந்த 8.5 பவுன் தங்க நகை மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண், சின்னசேலம் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்துள்ளார்.
போலீஸார் வழக்கு பதிவு செய்து, காரைக்குடியில் பதுங்கி இருந்த ரவிக்குமாரை நேற்றுக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.